இன்று வீட்டுக்கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் மொபைல் போன் எண்ணிக்கைக்கு அடுத்தது வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லோரும் தவறாமல் செய்வது வீட்டுக்கடன் வாங்குவது. வீட்டுக்கடன் பொதுவாக 20 வருடம் என எடுத்துக்கொண்டால், ஒரு லட்சத்திற்கு மாதம் 1,000 ரூபாய், 10.5% வட்டி விகிதத்தில் வரும். வட்டி மேலும் கீழும் சென்றாலும் சராசரியாக 10% நீண்ட கால அடிப்படையில் வரும்.

இது நம்முடைய அசலையும் சேர்த்து 2.5 மடங்கு. 50 லட்சம் ரூபாய்க்கு நாம் 120 லட்சம் ஏறக்குறைய கட்டுவோம். அவ்வளவு வட்டி எதற்கு தரவேண்டும் என்று பலர் 7 முதல் 10 வருடங்களில் கட்டி முடித்துவிடுவார்கள். அப்படியே பழக்கப்பட்டவர்களுக்கு அதிலி ருந்து வெளியே வருவது கடினம். பொதுவாக எல்லோரும் சொல்வது நான் நிறைய வட்டி கட்ட விரும்பவில்லை அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கவேண்டும்.

மேலும் சிலர் எனக்குக் கடன் இருந்தால் சரியாகத் தூக்கம் வராது. ஆனால் அவர்கள் சீக்கிரமாக கட்டி முடித்தவுடன் செய்யும் முதல் காரியம் முந்தைய வீட்டைவிட பெரிய வீடாக வாங்குவது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் EMI என்பது ஒரு போதை! முதல் சில மாதங்களுக்கு கடினமாக இருக்கும், பின்பு பழகிவிடும். நாம் அதிலிருந்து வெளியே வராதபடி நம் வீட்டின் கதவை எதாவது ஒன்று தட்டி கொண்டே இருக்கும்.

முதலீடு என்று வரும்போது நாம் உணர்ச்சிவயப்படக் கூடாது. உணர்ச்சி என்பது நமக்குத் தானே தவிர பணத்திற்கு எப்போதுமே இருந்ததில்லை. உணர்ச்சி இல்லாத பணத்தைக் கையாளும்போது நாமும் முடிந்தவரை உணர்ச்சி வயப்படாமல் இருக்க வேண்டும்.

இன்று எல்லோருக்கும் சவாலான விஷயம் வீட்டுக் கடனை சீக்கிரம் முடிப்பது நல்லதா அல்லது கடைசிவரை கட்டுவதா? நிறைய பேர் ஆலோசனை சொல்வது சீக்கிரம் கட்டுவது நல்லது என்பதே. நமக்கு எதிலாவது சந்தேகம் வந்தால் அதில் சிறிது நேரம் செலவிட்டு,ஒப்பிட்டுப்பார்த்தால் நம்மால் ஓரளவிற்கு தெரிந்து கொள்ள முடியும். இது அப்படிப்பட்டஒரு முயற்சியே. இதில் ஒரே ஒரு கண்டிஷன் உணர்ச்சிவயப்படாமல் இருப்பது!

நாம் அனுமானமாக எடுத்து கொள்வது.

1. 49,919 EMI 2. 10.5% 3. 20 வருடம்
அடுத்தது முன்பணம் கொடுத்தவுடன் குறையக்கூடிய பணத்தை PPFல் முதலீடு செய்வது. 8.7% வட்டி என்பது தற்போதய நிலை. வீட்டுக்கடன் முடிந்தவுடன் அந்த பணத்தை 20 வருடம் வரை PPFல் முதலீட்டை தொடர்வது.
மற்றொன்று அந்த முன்பணத்தை அப்படியே ​மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது. சென்செக்ஸ் கடந்த 34 வருடங்களில் 17% கூட்டுவட்டி கொடுத்துள்ளது. டிவிடெண்டை எடுத்துக்கொண்டால் இன்னும் 2% வரை வரும்.

​மியூச்சுவல் ஃ​பண்ட்​

முதலீடு கடந்த 20 வருடங்களில் நிறைய ஃபண்ட் 20% மேல் கூட்டு வட்டி கொடுத்துள்ளது. அதனால் 15% கூட்டு வட்டி எதிர்பார்ப்பது என்பது ஒரு மிதமான எதிர்பார்ப்பு. உங்களால் அதைகூட நம்பமுடியாது என்றால் 12% எடுத்துகொள்ளுங்கள்.

அட்டவணையைப்பற்றி

ஒருவர் வீட்டுக்கடன் வாங்கிய இரண்டாம் வருடத்தில் இருந்து, ஒவ்வொரு வருடமும் 5லட்சம் முன்பணமாக கட்டுகிறார், 6ஆவது மற்றும் 7ஆவது ஆண்டில் 8 லட்சம், பின்பு கடைசியில் மீதமுள்ள 3.68 லட்சம். 8 வருடத்தில் முடிந்துவிடும். 8 வருடத்தில் அவர் கட்டிய பணம்மொத்தமாக 73.32 லட்சம். இதை செய்பவருக்கு மிக்க மகிழ்ச்சி ஏனெனில் கொஞ்சம்தான் வட்டி கட்டுகிறோம் என்று.
1. பணத்தை வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிக்கு கொடுத்து EMI குறைத்த பணத்தை முதலீடுசெய்யும்போது நமக்கு ஏறக்குறைய 2 கோடி கிடைக்கிறது.
2. அதற்கு பதிலாக அந்த பணத்தை முதலீடு செய்யும்போது 12% கூட்டு வட்டியில் 2.67கோடியும், 15% கூட்டு வட்டியில் 4.08 கோடியும் கிடைக்கிறது.
சாராம்சம்: வீட்டுக்கடன் வட்டி என்பது நமக்கு கிடைக்கும் கடன்களில் மிகக்குறைந்த மற்றும் நீண்ட கால கடன். நீண்ட கால கடன் என்கிறபோது நாம் கட்டக்கூடிய பணமும்அதிகம், அதே சமயம் நமக்கு வருமானமும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்போது நம்மால் கடனை எளிதாக கட்டமுடியும். வருங்காலங்களில் நமக்கு வருமானம் கூடும் என்ற ஒரு நம்பிக்கையில் தான் எல்லோரும் கடன் வாங்குகிறோம் என்பது உண்மை. மேலும் முதலீட்டில் நாம் செய்யும் முதலீட்டின் அளவை விட எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோம் என்பது மிக முக்கியம்.
அட்டவணைப்படி பார்க்கும்போது ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

1.வீட்டுக்கடனை சீக்கிரம் முடிப்பது சரியான ஒரு முடிவு கிடையாது.
2.வீட்டுக்கடன் வாங்கும்போது நமக்கு எவ்வளவு தருகிறார் களோ அவ்வளவு லோன் எடுக்கவேண்டும்.
3.இன்று வீட்டுக் கடன் பொதுவாக 20 ஆண்டுகள். சிலர் 25 ஆண்டுகள் வரை தற்போது கொடுக்கிறார்கள். நாம் எப்போதுமே எவ்வளவு அதிக ஆண்டுகள் நமக்கு தருகிறார்களோ அவ்வளவு எடுத்துக்கொள்வது நல்லது.
4.நான் வீட்டுக் கடனில் கிடைக்ககூடிய சலுகை களை பற்றி இங்கு எடுத்துக்கொள் ளவில்லை. இந்தக் கட்டு ரையின் முயற்சி ஒருவர் வீட்டுக் கடன் வாங்கும்போது அதை சீக்கிரம் கட்டலாமா கூடாதா என்பதே.

வீட்டுக்கடன் சீக்கிரம் முடிப்பது என்பது தவறான முடிவு என்றால் மிகையாகாது!