Pages

Sunday 9 October 2011

My First Financial Planning Article in Naanayam Vikatan on 9th October 2011

நேற்று... இன்று... நாளை! 
குடும்ப நிதி ஆலோசனை
''எதிர்காலத்துல என் புள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்கணும்ங்கறது என் ஆசை கிடையாது. என்னால முடிஞ்ச வரைக்கும் கடன்படாம ரெண்டு குழந்தைகளையும் நல்லா படிக்க வைக்கணும். இதுதான் என் லட்சியம்'' என்று தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார், சுரேஷ்ராஜ் (வயது 29). இவரது மனைவி விமலா (வயது 29), குழந்தைகள் ஜனனி (வயது 6) மற்றும் ராகுல் (வயது 3) மூவரும் பெங்களூருவில் வசித்து வர, சுரேஷ்ராஜ் மட்டும் மும்பையில் அரசாங்க உத்யோகத்தில் இருக்கிறார்.
இவரது மாதச் சம்பளத்தில் பிடித்தம் போக கைக்கு வருவது 15,000 ரூபாய். ஓய்வு நேரத்தில் உழைப்பதன் மூலம் மாதம் 1,500 ரூபாய் சம்பாதிக்கிறார். மனைவி விமலா குழந்தைகளை பொறுப் பாகக் கவனித்துக் கொண்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறார். இவருக்கு மாதச் சம்பளம் 6,000 ரூபாய். ஆக, இவர்களது மொத்த மாதச் சம்பளம் 22,500 ரூபாய். ஜனனி பெங்களூருவில் தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறாள்.
'தர்மபுரியில ஊத்தங்கரை பக்கத்துல இருக்கிற பெரியதல் லப்பாடி என் சொந்த ஊரு. பத்து வருஷத்துக்கு முன்னாடி பெங்களூருவில இருக்குற ஆட்டோமொபைல் கம்பெனியில  வேலைக்குச் சேர்ந்தேன். அரசாங்க உத்யோகஸ்தனாகணும் அப்படிங்கறதுதான் என்னோட ஆசை. அதனால வேலை செஞ்சுகிட்டே படிச்சு அரசாங்க உத்யோகத்துக்கான பரிட்சை எழுதினேன். நான் பட்ட கஷ்டம் வீண் போகலை. மூணு வருஷத்துக்கு முன்னாடி மும்பை  ரயில்வே துறையில வேலைக்கு வந்து சேரச் சொன்னாங்க. இப்ப கடவுள் புண்ணியத்துல மனைவி, குழந்தைகள்னு சந்தோஷமா இருக்கோம். ஒரே ஒரு சின்ன வருத்தம் என்னன்னா, மும்பையில இருந்து மனைவி குழந்தைகளை மூணு மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பார்த்துட்டுப் போக முடியுது'' என்றவர், அடுத்து தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டார்.
''சொத்துன்னு பார்த்தா சொந்த ஊருல இருக்குற வீடு மட்டும்தான். கிராமம்ங்கறதால இப்ப அந்த வீட்டை வித்தாகூட 1.75 லட்ச ரூபாய்க்குதான் போகும். மனைவியோட தங்க நகை 13 சவரன் இருக்கும். சம்பாதிக்கற பணம் இப்ப செஞ்சுட்டு வற்ற சேமிப்புக்கும், செலவுக்குமே சரியா போயிடுது. எதிர்காலத்துக்கு சேமிக்கணும்னா என்ன செய்யுறதுன்னே தெரியல'' என்றார்.
''ஜனனியை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கணும். இன்னும் 12 வருஷம் கழிச்சு படிப்புச் செலவுக்கு 10 லட்சம் ரூபாயாவது தேவைப்படும். ராகுலை பி.இ. படிக்க வைக்கணும்; இதுக்கு 15 வருஷம் கழிச்சு
20 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஜனனிக்கு 25 வயசுல கல்யாணம் பண்ணனும். இதுக்கு இன்னும் 19 வருஷம் இருக்கு. அதுக்குள்ள 20 லட்சம் ரூபாயை எப்படியாவது புரட்டணும்.
ராகுலுக்கு 27 வயசுல கல்யாணம் பண்றப்ப, எங்களுக்கு அதிகம் செலவாகாதுங்கிறதால அஞ்சு லட்சம் ரூபாய் இருந்தாப் போதும். பெங்களூருவில அஞ்சு வருஷத்துக்குள்ள எப்படியாவது ஃபிளாட் வாங்கிடணும். இப்ப வாங்கணும்னா 15 லட்சம் தேவைப்படும். அஞ்சு வருஷம்ங்கற போது குறைந்த பட்சம் 25 லட்சமாவது தேவைப் படும். அப்புறம் என்னோட ஓய்வு காலத்துல மாதம் 12,000 ரூபாய் வருமானம் வந்தால் நானும் என் மனைவியும் புள்ளைங் களுக்கு தொந்தரவு தராம சிக்கனமா குடும்பத்த நடத்திக் குவோம்'' என்று எதிர்காலத் தேவைகளை விளக்கமாகச் சொல்லி முடித்தார்.
இவரது குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்து ஆலோசனை சொல்லத் தயாரானார் சென்னையைச் சேர்ந்த குடும்ப நிதி ஆலோசகர் பத்மநாபன்.
''சிக்கனமாகச் செலவு செய்து கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார் சுரேஷ்ராஜ். இவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எதிர்காலத்துக்கான சிந்தனை யுடன் இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்'' என்றவர், எதிர்கால பாதுகாப்பிற்காக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சொன்னார்.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்..!
''சுரேஷ்ராஜ் எதிர்கால பாதுகாப்பு கருதி ஜீவன் சரல் மற்றும் இரண்டு பென்ஷன் பிளான்களை எடுத்து வைத்திருக் கிறார். இதற்காக மாதம் 4,400 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்து விடுவது நல்லது. டேர்ம் இன்ஷூரன்ஸுக்கு வருடம் 5,400 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டிவரும். இது தவிர, தனக்கும் மனைவி விமலா மற்றும் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வருடம் 8,400 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி வரும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும்'' என்றவர், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு எப்படி முதலீடு செய்வது என்பதை விளக்கினார்.
மகளின் கல்வி, திருமணத்துக்கு..!
''சுரேஷ்ராஜின் உறவினர்கள் எல்லோரும் அரசாங்க பதவியில் இருப்பதால் அவர்களுக்கு மத்தியில் தனது மகள் ஜனனியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்கிறார். 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் (எஸ்.ஐ.பி. முறையில்) மாதம் தோறும் 2,000 ரூபாய் வீதம் 11 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால், முடிவில் 6.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு முன்னதாக ஏதேனுமொரு பட்டப் படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்பதால் கல்லூரி கட்டணத்திற்குக் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைத்திருக்கும் இந்த 6.5 லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மீதி இருக்கும் 1.5 லட்சத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 2,000 ரூபாயை முதலீடு செய்து வந்தால், ஐ.ஏ.எஸ். பயிற்சிக்குத் தேவையான மீதி ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்துவிடும்.
அவசரத் தேவைக்காக 50,000 ரூபாயில் இரண்டு சீட்டுகளை போட்டு வைத்திருக்கிறார் சுரேஷ்ராஜ். இதற்காக சீட்டு ஒன்றுக்கு மாதம் 2,000 ரூபாய் கட்டி வருகிறார். ஒரு சீட்டு ஆரம்பித்து 12 மாதமும் மற்றொரு சீட்டு ஆரம்பித்து 2 மாதமும்தான் ஆகியிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய 50,000 ரூபாய் சீட்டிலிருந்து விலகிவிட்டு மற்றொரு சீட்டை தொடர்ந்து சேமித்து வருவது அவசரத் தேவைக்குப் போதுமானது.
ஓராண்டுக்குள் இந்த சீட்டு முடிந்ததும் 2,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் 18 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் 20 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஜனனிக்கு 25 வயதில் திருமணம் செய்ய தேவைப்படும் 20 லட்சத்திற்கு இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.

ராகுலின் கல்வி, திருமணத்திற்கு..!
''ராகுலை பி.இ. படிக்க வைக்க 20 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறார். நீண்ட காலத்தில் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் 3,000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்து வருவதன் மூலம் கல்லூரி படிப்புக்குத் தேவையான முழுப் பணமும் கிடைத்துவிடும். இதை பயன்படுத்தி ராகுலை நல்ல பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்கலாம்.
ராகுல் தன்னுடய 22 வயதில் பி.இ. பட்டதாரியாகி இருப்பார். அதன் பிறகு ராகுல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். இந்த பணத்தை வேறெந்த விஷயத்திற்கும் பயன்படுத்தாமல் ராகுலின் திருமணத்திற்கென்று ஐந்து ஆண்டுகள் சேமித்து வருவதன் மூலம் ராகுலுக்கு 27 வயதில் நல்ல முறையில் திருமணத்தை செய்து முடிக்கலாம்'' என்றவர், ஓய்வு காலத்துக்கான திட்டத்தையும் சொன்னார்.
ஓய்வு காலத்துக்கு..!
''ஓய்வு காலத்தில் மாதம் 12,000 ரூபாய் இருந்தால் போதும் என்கிறார். இன்றைய நிலவரப்படி சுரேஜ்ராஜின் குடும்பச் செலவு 22,500 ரூபாய். இதே போல் 31 ஆண்டுகள் கழித்தும் செலவு செய்ய நினைத்தால் அன்றைய நிலவரப்படி இவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்காக ஓய்வு காலம் வரை மாதம் 1,000 ரூபாயை (எதிர்பார்க்கக் கூடிய வருமானம் 16%) ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 31 ஆண்டுகள் முதலீடு செய்து வர வேண்டும். முடிவில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்தால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுபோக, சுரேஷ்ராஜுக்கு அரசிடமிருந்து மாத பென்ஷன் கிடைக்கும். இதன் மூலம் ஓய்வு காலத்தை சந்தோஷமாக கழிக்கலாம்'' என்றவர், சுரேஷ்ராஜின் ஃபிளாட் வாங்க வேண்டும் என்கிற ஆசைக்கு என்ன செய்யலாம் என்பதையும் சொன்னார்.
''ஐந்து ஆண்டுக்குள் பெங்களூருவில் 25 லட்சம் ரூபாயில் ஃபிளாட் வாங்க வேண்டும் என்கிறார். இப்போது இருக்கும் குடும்ப நிதி நிலைமை இப்படியே தொடர்ந்து நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஃபிளாட் வாங்கும் ஆசையைத் தள்ளிப் போடுவது நல்லது.
புதிதாக டேர்ம் பிளான் எடுத்து இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதின் மூலம் கிடைக்கும் 4,400 ரூபாயுடன், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மும்பையிலிருந்து பெங்களூருவுக்கு வந்து செல்லும்போது செய்யும் தேவையற்ற செலவுகளைக் குறைத்து கொண்டு, பகுதி நேர வேலையின் மூலம் இன்னுமொரு 1,500 ரூபாய் அதிகமாகச் சம்பாதித்தால் எதிர்கால முதலீட்டுக்குத் தேவையான தொகை கிடைத்துவிடும். இதை வைத்து மேலே சொன்னபடி முதலீடு செய்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.'' வாழ்த்துக்கள்!  
- செ.கார்த்திகேயன்

No comments:

Post a Comment