Pages

Monday, 7 July 2014

My 40th Article In The Hindu Tamil Dated 7th July 2014, About The Importance of Portfolio Review

போர்ட்போலியோ திறனாய்வின் அவசியம் - பா.பத்மநாபன்

 


நாம் பலதரப்பட்ட முதலீடுகளை செய்திருப்போம். சில முதலீடு களை அதன் பயனை உணர்ந்து செய்திருப்போம், பல முதலீடுகள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் செய்யப்பட்டிருக்கும். இன்னும் சில கடைசி நிமிடத்தில் வருமான வரி விலக்கு தேவைக்காக செய்யப்பட்டிருக்கும்.

முதலீட்டுடன் பற்று வேண்டாம்

நான் சந்திக்கும் பலர் உணர்வு பெருக்கோடு வாழ்க்கையை கடத்து கிறார்கள். பலருக்கு தான் வாங்கிய முதல் வீடு, இன்ஷூரன்ஸ் பாலிசி முதலியவற்றில் தேவையில்லாமல் ஒரு பற்றுதல் இருக்கிறது. அதனால் இந்த கால கட்டத்தில் பலன் இல்லை என்று தெரிந்தாலும் அதை விட்டு விலகுவதில்லை. மேலும் தன்னுடைய போர்ட்போலியோ திறனாய்வுக்கு எடுத்து செல்லும்போதும் அதைப் பற்றி ஆலோசனை கூறும் ஆலோசகர் சிலவற்றை பற்றி கமெண்ட் செய்யும்போது அதை பர்சனலாக எடுத்துக்கொள்வதும் உண்டு. இவர் யார் என்னுடைய செலக்க்ஷன் பற்றி குறை கூறுவது, இந்த பாலிசிகளை தவிர்த்து புதியதாக வாங்குவதை பற்றி சொல்லுங்கள் என்று நிர்பந்தம் செய்பவர்கள் பலர்.

போர்ட்போலியோ திறனாய்வு செய்வதால் நம்மால் தேவை இல்லாத முதலீடுகளை தவிர்க்கவும், வாங்கியவற்றில் இருந்து வெளியே வரவும் இயலும். நம்மில் பலர் அதற்கென நேரம் ஒதுக்கி அதனுடைய செயல்பாடுகளை அறிவதற்கு விரும்புவதில்லை. திடீரென்று தேவைப்படும்போது அவற்றை பற்றி அறிவது, ஒரு நோயை பல நாட்கள் கண்டும் காணாமலும் இருந்து அது முற்றிய பின்பு பார்ப்பதற்கு சமம்.

மேலும் நம்முடைய தேவைகளும், விருப்பங்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அதற்கு எல்லை என்பதே கிடையாது. அப்படி இருக்கும்போது முன்பு எப்போதோ வாங்கிய பணவீக்கத்தை கட்டுப்படுத்தாத முதலீடுகளை எப்படி தொடருவது? சிந்திக்க வேண்டிய விஷயம்.

அசல் மட்டுமே முக்கியம் அல்ல
எண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் பாலிசி வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வாங்கியதில் தப்பில்லை, அது தற்போது உள்ள சூழலுக்கு உதவாது என உணர்ந்தால் அதிலிருந்து வெளியே வருவது நல்லது. எல்லோருக்கும் உள்ள மற்றொரு பழக்கம் எந்த முதலீடாக இருந்தாலும் அசலை இழந்து விடக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த அசலுக்கு பர்ச்சேசிங் பவர் உள்ளதா இல்லையா என்ற கவலை எல்லாம் கிடையாது. இது மிகவும் தவறு.

பெரும்பாலான பென்ஷன் பாலிசிகளில் அவர்கள் வருடா வருடம் என்ன தொகை கொடுப்பார்கள் என்று தான் சொல்வார்கள். நம்மில் பலர் 1 லட்சம் என்றவுடன், ஆஹா எவ்வளவு பெரிய தொகை என்று ஆச்சரியப்படுவர், அதை மாதா மாதம் கணக்கிட்டால் வெறும் 8,333 ரூபாய் தான்.

காலத்துக்கேற்ற மாற்றம் தேவை

தொரடர்ந்து பரிசீலனை செய்யும்போது தேவையற்ற முதலீடுகளை மாற்றியும், ஒரு முதலீடு கடந்த வருடத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமான வருமானம் கொடுத்திருந்தால் அதில் கொஞ்சம் பணத்தை மற்றொரு முதலீட்டிற்கு மாற்றி மீண்டும் போர்ட்போலியோவை சமன் செய்து கொண்டே இருந்தால் முதலீட்டின் ஏற்ற இறக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வரலாம். மேலும் காலத்திற்கேற்ப பல முதலீட்டு திட்டங்கள் வந்தவண்ணம் உள்ளன. அதைப்பற்றிய விஷயங்களை ஒரு நிதி ஆலோசகர் நிறைய தெரிந்து வைத்திருப்பார். இது போர்ட்போலியோ திறனாய்வின் போது மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும்.

மற்றொரு தவறு என்னிடம் பணம் இல்லை, ஏற்கனவே எல்லா பணத்தையும் முதலீடு செய்துவிட்டேன் என்று சொல்வது. போர்ட்போலியோ திறனாய்வின் மூலம் தேவையற்ற முதலீட்டை மாற்றி அமைப்பதன் மூலம் நம்மால் கண்டிப்பாக சேமிக்கமுடியும். எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கவனிக்க தவறினால் சிறந்த வருமானத்தை வெளிப்படுத்தமுடியாது, வருடா வருடம் திறனாய்வு செய்வது மிகவும் முக்கியம். 8 வருடம் முன்பு என்னுடைய நண்பர் ஒருவர் மாதம் ரூ. 20,000 சம்பாதித்து வந்தார், இப்போது அவருடைய சம்பளம் ரூ. 1.50 லட்சம், ஆனால் இன்றும் என்னால் சேமிக்க முடியவில்லை என்ற எண்ணமே வெளிப்படுகிறது.

குறைந்த அளவு எது என்று கூறுவது மிகவும் கடினம். இந்த மாதிரி பல பேர் உள்ளார்கள், இவர்கள் உடனடியாக தங்களுடைய போர்ட்போலியோவை மறு பரிசீலனை செய்வதற்கு இது சரியான நேரம். 

எந்த ஒரு இனஷூரன்ஸ் பாலிசியை நடுவில் எடுத்தாலும் கண்டிப்பாக பணத்தை இழப்பது உறுதி, யூலிஃப் பாலிசிகளை தவிர. அதே சமயம் அதை நீண்ட நாள் தொடரும்போது நாம் போட்ட பணத்தைவிட கூட கிடைக்கும். ஆனால் அதனுடைய மதிப்பு, கண்டிப்பாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தாது. திறனாய்வில் அதைப்பற்றி அலசுவதால், சரண்டர் செய்யும்போது வரக்கூடிய இழப்பை வேறு முதலீட்டிற்கு மாற்றும்போது கண்டிப்பாக அந்த இழப்பை சரி செய்வதுடன் அந்த ரிடர்ன்ஸ் அதிகமாக வளருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

முதலீடு செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அந்த முதலீட்டை வருடம் ஒருமுறையோ அல்லது எப்போதெல்லாம் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போது திறனாய்வு செய்யவேண்டும்.

சாராம்சம்: இதனால் தேவை இல்லாத முதலீட்டிலிருந்து வெளியே வருவதுடன், வரும் காலத்தில் இந்த வகையான முதலீடுகளை இனம் கண்டு அதை தவிர்க்கவும் முடியும். வெளியே இருந்து பார்க்கும்போது நாம் நிறைய பணத்தை சேமிப்பதாக தோன்றும், ஆனால் அவற்றில் பல சரியான முதலீடாக இல்லாததால் நம்மால் நாம் நினைத்த மாதிரி இலக்குகளை அடைய முடியாது.

போர்ட்போலியோ திறனாய்வு செய்யவும், புதிய முதலீடுகளை தொடரவும் மிக சரியான தருணம் இது. கடந்த 6 ஆண்டுகளாக கொடுக்காத வருமானம் இன்னும் 5 வருடத்தில் சேர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். போர்ட்போலியோ திறனாய்வை தொடர்ந்து கவனிப்பது என்பது ஒவ்வொருவருடைய கடமை, இது உங்களுடைய பணம், அதற்கு நீங்களே பொறுப்பு, மற்றவர்களை குறை கூறுவதால் இழப்பு உங்களுக்குத் தான்.

Monday, 30 June 2014

My 39th Article In The Tamil Hindu Datad on 30th June 2014, About Which Is The Right Investment?

எது சிறந்த முதலீடு? - பா. பத்மநாபன்

 

எதில் நாம் முதலீடு செய்கிறோமோ அது நாளடைவில் வளரக் கூடியது அல்லது முன்னேறக் கூடியது. நம்முடைய நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்கினால் நமக்கு நல்ல ஆரோக்கியமான உடல் தகுதி கிடைக்கும். அதே போல படிப்பிற்கு ஒதுக்கினால் மற்றவர்களை விட நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் நாம் எதற்கு நேரம் ஒதுக்குகிறோமோ, நிச்சயம் அதில் நமக்கு வெற்றி கிடைக்கும்.

முதலீடு என்றவுடன் நம் கண்ணுக்கு தெரிவது ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள். மற்றவை யாவும் சேமிப்பு வகையைச் சார்ந்தது. இதில் ரிஸ்க் கிடையாது, நமக்கு கிடைக்கக்கூடிய வட்டி என்ன என்று நாம் பணத்தை போடும் போதே தெரியும். பெரும்பாலான சேமிப்பு பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில்லை. எனவே நாம் முதலீட்டை தேர்ந்தெடுக்கிறோம்.

தங்கத்தில் முதலீடு சிறந்ததா?

முதலில் தங்கத்தை எடுத்துக் கொள்வோம். அது ஒரு உலோகம், அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது; ஆனால் எளிதில் பணமாக மாற்றிக் கொள்ள முடியும். அது ஒரு சந்ததியில் இருந்து மற்றொரு சந்ததிக்கு ரிலே ரேஸ் போல செல்கிறது. திருமணத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அப்படிப்பட்ட உலோகம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால் எப்படி சாமானிய மக்கள் வாழ்க்கை நடத்துவது? எனவே அது பணவீக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அது நீண்ட கால அடிப்படையில் ஒரு சிறந்த முதலீடாக இருக்க முடியாது. கடந்த காலங்களில் நடந்தது போல, சில சமயம் ஓரிரு வருடங்களில் நன்றாக செயல்பட வாய்ப்புள்ளது.

மேலும் தங்கத்தைப் பாதுகாப்பது என்பது கொஞ்சம் கடினம். நிறைய பேர் காகித தங்கத்தில் நாட்டம் காட்டுவதில்லை. உங்களுக்குப் பெண் குழந்தை இருந்தால் வேறு வகை முதலீடுகளில் சேமித்து தங்கத்தை அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாங்கிக் கொள்ளலாம். பாதுகாப்பும் அதிகம், வாங்கி விற்பதில் விரயமும் இல்லை.

பண்ணை நிலம்

அதே சமயம் பண்ணை நிலம் வாங்கினால் அதில் ஏதாவது விளைவிக்கலாம் அதில் நமக்கு ஒரு தொகை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது பல முறையோ கிடைக்க வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த இடத்திற்கான மதிப்பும் நாளடைவில் அதிகரிக்கும். அத்தகைய நிலத்தை வாங்குவதற்கு பெரும்பாலோரிடம் கையில் பணம் இருப்பதில்லை. அதை வீட்டுக்கடன் மூலம் வாங்கினால் அதில் கிடைக்கக் கூடிய லாபம் ஓரளவிற்கு இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அதைத் தவிர்ப்பது நல்லது.

ஆனால் இன்று பலர் கண்காணாத இடத்தில் அரை கிரவுண்ட் அல்லது ஒரு கிரவுண்ட் வாங்கி அது இன்னும் சில காலங்களில் பல மடங்கு வரும் என எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இது பலன் தராது. வீடாகக் கட்டிவிட்டால் அதற்கு வாடகை மற்றும் அதனுடைய மதிப்பும் கூடும், வெறும் காலி மனையாக இருந்தால் அதை விற்கும்போதுதான் அதன் மதிப்பை உணர முடியும்.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை என்பது ஒரு பிசினஸ். பிசினஸ் வளர்ந்தால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அதனால் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் வரும். 1980 களின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனத்தால் இந்திய நாட்டிற்கே பெருமை. அதனால் பலருக்கு நல்ல வேலை வாய்ப்புக் கிடைத்தது அன்று வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்று பல லட்சம் கோடிக்கு வளர்ந்துள்ளது. இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறது.

விப்ரோ பங்கு

நீண்ட கால முதலீட்டின் பெருமையை பறை சாற்றக்கூடிய ஒரு முதலீடு என்று சொன்னால் விப்ரோ நிறுவனத்தின் பங்கை பற்றி நம்மால் குறிப்பிடாமல் இருக்க முடியாது. 1980-ல் ஒருவர் 100 ரூபாய் உள்ள விப்ரோ பங்கு 100 வாங்கியிருந்தால் அவர்களுடைய முதலீடு 10,000 ரூபாய். அப்போது உள்ள 10,000 ரூபாய் 8% பணவீக்கத்தின்படி பார்த்தால் இன்றைய 1.37 லட்சம் ரூபாய்க்குச் சமம். இந்த நிறுவனம் 1981ம் ஆண்டில் 1:1 போனஸ் பங்கு வழங்கியது. அப்போது அவரிடம் உள்ள பங்கின் எண்ணிக்கை 200.
மீண்டும் 1985 ம் ஆண்டில் அந்த நிறுவனம் 1:1 போனஸ் கொடுத்ததில் 400 பங்குகள் ஆகிவிட்டன. 1986ல் 100 ரூபாய் பங்கானது 10 ரூபாய் முக மதிப்பாக மாற்றியதில் 400 பங்கு 4000 பங்காக மாறிவிட்டது.
1987ல் மீண்டும் ஒரு போனஸ் 1:1 இப்போது அது 8000. 1989ல் மீண்டும் ஒரு 1:1, மொத்தபங்கு அப்போது 16,000.
1992ல் மீண்டும் ஒரு போனஸ் 1:1 அப்போது அது 32,000. 1995ல் 1:1 அது 64,000. 1997ல் 2:1 போனஸ் அப்போது 1,92,000 பங்குகள். 1999 ல் 10 ரூபாய் மதிப்புள்ள பங்கு 2 ரூபாயாகக் குறைக்கப்பட்டவுடன் அது மொத்தம் 9,60,000 பங்காகி விட்டது.
2004ல் மீண்டும் 2:1 போனஸ் அப்போது அது 28,80,000. 2005ல் மீண்டும் ஒரு 1:1 போனஸ் அது 57,60,000 பங்கு.
கடந்த 2010 ல் 2:3 போனஸ் அதன்படி 96,00,000 பங்குகள். கடந்த வெள்ளிக் கிழமை அந்தப் பங்கின் விலை 546 ரூபாய். அதை 96 லட்சத்தோடு பெருக்கினால் கிடைக்கக் கூடியது 524 கோடி ரூபாய். இதில் நாம் எந்தவித டிவிடெண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பொதுவாக இரண்டு டிவிடெண்ட் இந்த நிறுவனம் தருகிறது.
இடைக்கால டிவிடெண்ட் ஜனவரி மாதம் 150% கொடுத்துள்ளது, அதாவது 2 ரூபாய் மதிப்பில் 150% கணக்கிட்டால் 3 ரூபாய் ஒவ்வொரு பங்கிற்கும் தரப்படும். 96 லட்சத்தை 3ல் பெருக்கினால் 2.88 கோடி ரூபாய் அதற்கு வருமான வரி கிடையாது. இறுதி டிவிடெண்ட் 5 ரூபாய் வரும் ஜூலை மாதம் தரவிருக்கிறார்கள். இந்த உதாரணம் பங்குச் சந்தை எவ்வளவு பெரியது நீண்ட கால அடிப்படையில் என்று சொல்வதற்காக விரிவாக கொடுக்கப்பட்டது.

பல நிறுவனங்கள் நன்றாக செயல் பட்டன. வாங்கியவருக்கு மட்டும் லாபம் இல்லை எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு, நாட்டின் பொருளாதரத்திற்கு இந்த நிறுவனங்கள் ஒத்துழைப்பு தந்திருக்கிறது முதலியவற்றைப் பார்க்க வேண்டும்.

முதலீடு என்பது சப்ளை மற்றும் டிமாண்ட் பொருத்து இருந்தால் அது மிகவும் ரிஸ்க். தங்கம் அந்த வகையைச் சார்ந்தது. காலி மனை விற்றால் தான் லாபம். பார்ம்லேன்ட் அதில் எதாவது ஒன்றைப் பயிரிடும்போது நமக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதேசமயம் வாடகைக்கு விடப்படும் வீடும் மாதா மாதம் கொஞ்சம் பணம் ஈட்டும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள், நீண்ட கால அடிப்படையில் நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய, உபயோகிக்கக்கூடிய பங்குகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

வளராத எதுவும் முதலீடாக முடியாது. வளர்ச்சி என்பது அதிகம் காணப்படுவது தொழில் நிறுவனங்களில்தான். அதைப்பற்றிய அறிவுடன் அல்லது அதை பல ஆண்டு நிர்வகிக்கக் கூடிய நிறுவனங்களில் இணைவதன் மூலம் நிறைய பணம் பண்ண முடியும்.

Monday, 23 June 2014

My 38th Article In The Hindu Tamil Hindu Dated on 23rd June 2014, About Margin Of Safety In Investments!

பாதுகாப்பு விளிம்பு - பா. பத்மநாபன்



பாதுகாப்பு விளிம்பு என்பது முதலீட்டில் மிக மிக முக்கியமான ஒன்று. முதலீட்டில் ஈடுபடுவதற்கு முன்பு, பலருக்கு இதைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. பாதுகாப்பு விளிம்பில் முதலீடு செய்தவர்கள் பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, இதை ஆங்கிலத்தில் (Margin of Safety) என்று சொல்வார்கள்.

நாம் முதலீட்டைத் தொடங்குவதற்கு முன்பு அந்த முதலீடு கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டுள்ளது வரும் காலங்களில் எவ்வாறு செயல்படும் என்று பார்க்க வேண்டும்.

பாதுகாப்பு விளிம்பு என்பது இன்று ரியல் எஸ்டேட் முதலீடுகளில் கொஞ்சம் கூடக் கிடையாது. சாதாரண வீட்டு மனை கூட கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்போது வாங்கினால் நாம் பலன் அடைவதைவிட, பணத்தை இழக்க வேண்டிய வாய்ப்புகள்தான் அதிகம். 2003 மற்றும் 2004 ம் ஆண்டுகளில் பாதுகாப்பு விளிம்பு மிக அதிகமாக இருந்தது, அன்று முதலீடு செய்தவர்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில் உள்ளார்கள்.

முதலீடுகள் சுழற்சிக்கு உட்பட்டவை. எந்த ஒரு முதலீடும் எல்லா கட்டங்களிலும் நன்றாக செயல்படாது. நம் வாழ்க்கையைப் போல முதலீடுகள் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. அது இயற்கையின் நியதி; நாம் கேள்வி கேட்க முடியாது, அதை உணர வேண்டும். அந்த முதலீட்டு வாய்ப்பு தற்போதுதான் ஆரம்பித்துள்ளதா, இல்லை முடிவுக்கு வந்துள்ளதா என்பதை அறிவது மிக எளிது.

ஒரு முதலீட்டைப் பற்றி அனைவரும் பேசத் தொடங்கினால், அது முடிவுக்கு வந்துவிட்டது. அந்த முதலீடு வரும் காலங்களில் நன்றாக செயல்படாது, மாறாக பலருக்கு ஒரு முதலீட்டு வாய்ப்பின் பேரில் நம்பிக்கை இல்லை, அதனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை என்றால், சத்தம் போடாமல் நாம் அந்த முதலீட்டில் முன்பே நுழைந்து விடவேண்டும்! இதற்கு ஆங்கிலத்தில் (Early Mover Advantage) என்று பெயர்.

பாதுகாப்பு விளிம்பை எப்படி அறிந்து கொள்வது என்றால் அந்த முதலீடு கீழே விழுவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு, மேலும் எத்தனை சதவிகிதம் என்று சற்று உள்நோக்கி பார்க்க வேண்டும். உதாரணமாக பங்குச் சந்தை 2008 ஜனவரி மாத தொடக்கத்தில் சென்செக்ஸ் 20870 புள்ளிகள். 

அது 2003 முதல் 6.5 மடங்கு வரை உயர்ந்துள்ளது. 5 வருடங்களில் 6.5 மடங்கு என்பது மிக மிகப் பெரியது. இங்கு பாதுகாப்பு என்பது துளி கூட கிடையாது மாறாக ரிஸ்க்தான் அதிகம், பலர் 2008ல் முதலீடு செய்து, இன்னும் அது வளரவில்லை என்று கூறுகிறார்கள்.

ஒரு நிகழ்வின் மூலம் நாம் என்ன கற்று கொண்டோம் என்பது மிக முக்கியம். தற்போது 6 வருடங்களுக்கு மேலாக அதே முதலீடு வெறும் 20% தான் உயர்ந்துள்ளது. கணக்கிடும்போது அது வருடத்திற்கு 3% கூட கூட்டு வட்டியில் உயரவில்லை.

இப்போது, இந்த முதலீட்டில் பாதுகாப்பு விளிம்பு மிக மிக அதிகம். 3 முதல் 5 வருடம் காத்திருக்க முடிந்தால் மியூச்சுவல் ஃபண்டிலோ அல்லது உங்களுக்கு நேரம் மற்றும் அனுபவம் இருந்தால் நேரடியாக பங்குச் சந்தையிலோ முதலீடு செய்யலாம். மேலும் பங்குச் சந்தை மதிப்பு என்பது அதில் உள்ள நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்தது, நீண்ட கால முதலீட்டில் உத்தேச பேரம் (Speculation) என்பது கிடையாது.

அதே வேளையில் தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் முதலீடுகள் கடந்த காலங்களில் கொஞ்சம் கூட குறையவில்லை. கடந்த 5 முதல் 10 வருடங்களை ஒப்பிடும்போது. இங்கு பாதுகாப்பு விளிம்பு என்பது கொஞ்சமும் இல்லை. இதைத் தவிர்ப்பது நல்லது, அதிகம் ரிஸ்க் விரும்புபவர் அதை உணர்ந்து எடுப்பது நல்லது.

முன்பே சொன்னதுபோல உத்திரவாத வட்டி என்பது 8% முதல் 10% வரைதான். ஆனால் சிலரோ அல்லது சிறிய நிறுவனமோ நாங்கள் கார் பிசினஸ், பங்குச் சந்தையில் டெரிவேட்டிவ் டிரேடிங், ஈமு கோழி வளர்க்கிறோம் என பல வகைகள், வந்த வண்ணம் இருக்கின்றன. அவர்களும் ரூம் போட்டு யோசித்து விதம் விதமாய் ஏமாற்றுகிறார்கள். நாமும் அதில் விட்டதை, இதில் பிடித்து விடலாம். இது ஓரளவிற்கு நம்பிக்கையாகத் தெரிகிறது, மாதத்திற்கு 4 முதல் 5% வட்டி தருகிறோம் என்று சொல்வதைக் கேட்டு மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.

இதில் பாதுகாப்பு என்பதே இல்லை எனவே பாதுகாப்பு விளிம்பைப் பற்றிப் பேசுவதற்கு இடமில்லை. இன்று பெரிய பெரிய உற்பத்தி செய்கின்ற தொழில் நிறுவனங்களே 15 முதல் 20% க்கு மேல் பணம் ஈட்ட முடியாதபோது எவ்வாறு சிலரோ அல்லது சிறு நிறுவனமோ 48% முதல் 60% வரை உங்களுக்குக் கொடுக்கும். மேலும் அவர்கள் வங்கியிலோ அல்லது வேறு சில இடங்களிலோ வட்டிக்கு வாங்கினால் கூட 48% கொடுக்கத் தேவையில்லை. அப்படி இருக்கும் போது நமக்கு 48% வட்டி கொடுத்து எத்தனை சதவிகிதம் அவர்களால் சம்பாதிக்க முடியும்?

நம்முடைய பணத்தைப் பாதுகாப்பதற்கு நாம் முயற்சி செய்யா விட்டால் வேறு யார் செய்வார்கள்? முதலில் நம்முடைய பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்வது என்பது நம்முடைய பொறுப்பு. மற்றவர் சொல்கிறார்கள் என்று எதிலும் முதலீடு செய்ய வேண்டாம், நமக்கு என்ன தேவை என்று நம்மைத் தவிர பிறருக்கு அவ்வளவாகத் தெரியாது. எனவே கொஞ்சம் பிளான் செய்து, பாதுகாப்பு விளிம்பையும் யோசித்து முதலீடு செய்வது நல்லது.

சாராம்சம்: முதலீட்டின் முதல் படியாக பாதுகாப்பு விளிம்பை நாம் அறிந்து செயல்பட்டால் ரிஸ்க் என்பது அறவே இல்லை என்று கூட சொல்லலாம். எந்த ஒரு முதலீட்டையும் அது உச்சத்தில் இருக்கும்போது அதாவது பல மடங்கு கடந்த காலங்களில் உயர்ந்து காணப்பட்டால் அதைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் செயல்படாத முதலீடு மிகவும் ரிஸ்க் வாய்ந்தவை. முதலீட்டை பற்றி அறிந்து கொள்ளுங்கள், நிறைய பணம் செய்யலாம் வாருங்கள்.

Monday, 16 June 2014

My 37th Article In The Tamil Hindu Dated on 16th June 2014, About Is It A Right Time To Enter Into Stock Market Related Investments?

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற தருணமா? - பா. பத்மநாபன்

 

எந்த ஒரு வாய்ப்புமே நம் வீட்டுக் கதவை தானாக வந்து தட்டாது. நம் கண்களையும் காதுகளையும் எப்போதும் அலர்ட்டாக வைத்திருந்தால் அந்த வாய்ப்பை உணர்ந்து நாம் பயன் பெற முடியும். இந்த ஆண்டு தொடங்குவதற்கு முன்பு, நம்முடைய பங்குச் சந்தை கடந்த 6 வருடங்களாக எந்த ஒரு ஏற்றத்தையும் சந்திக்கவில்லை. அதனால் பெரும்பாலோருக்கு இந்த முதலீட்டில் நம்பிக்கை இல்லை.
அதேசமயம் நாம் தேர்தலை சந்திக்கும் தருணம், நிறைய எதிர்பார்ப்புகள், அதனால் வரக்கூடிய வாய்ப்புகளைப் பற்றி ஒரு தடவை யோசித்திருந்தால், இந்த 6 மாதங்களில் 30% ரிடர்ன்ஸ் வரை எளிதாகப் பயன் பெற்றிருக்கலாம்.
இது, பங்குச் சந்தை வரும் காலங்களில் மேலே செல்லப் போவதற்கான ஒரு முன்னோட்டம்தான். ஆனால் பலருக்கு இது முன்னோட்டமாகத் தோன்றாமல் இதுதான் முடிவோ என பயந்து பணத்தை வெளியில் எடுத்தும் இன்னும் சிலர் சந்தை பழைய நிலைக்குத் திரும்ப வரும், அப்போது முதலீடு செய்து கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள்!
சந்தை கரடியின் பிடியிலிருந்து இப்போது காளையின் சீற்றத்துக்கு வந்துள்ளது. ஏப்ரல் 1, 2003 ல் மும்பை சந்தையின் குறியீட்டு எண் 3,081, ஜனவரி 7, 2008 ல் 20,813. 5 வருடத்திற்கும் குறைவான கால அவகாசத்திலேயே 6.75 மடங்கு அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் 3 முதல் 4 மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பலர் ஒரு பங்கை வாங்கும் போதோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தை வாங்கும்போதோ குறைந்த NAV இருந்தால் ரிஸ்க் குறைவு என்று நினைக்கிறார்கள். இதை விற்ற முகவர்களும் முன்பு உங்களுக்கு நிறைய யூனிட்ஸ் அல்லது பங்கு கிடைக்கும் என்று கூறியே விற்று விட்டார்கள். நாம் யூனிட்டையோ அல்லது பங்கையோ வைத்து எதுவும் செய்யப் போவதில்லை, அதனால் அது அதிகமாக இருக்கிறது என்று சொல்லிப் பயனில்லை. ஒருவர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பதைவிட, ஒரு கிரவுண்ட் வீட்டு மனை நகரத்தில் வைத்திருப்பது எவ்வளவோ பெரியது!
நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு நிறுவனம் MRF டயர்ஸ். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ஏறக்குறைய 5 வருடம் முன்பாக அதாவது ஜூலை 13ம் தேதி 2009ம் ஆண்டு ரூபாய் 3,120. 12 ஜூன் 2014 அன்று 23,851. அதாவது 7.65 மடங்கு உயர்ந்துள்ளது. பலர் 3000 ரூபாய் பங்கை விலை கொடுத்து வாங்கத் தயங்குவார்கள், ஆனால் இன்று 23,000 ரூபாய் கொடுத்து வாங்குபவர்கள் மிகக் குறைவு.
கடந்த 5 வருடங்களில் சந்தை சிறப்பாகச் செயல்படவில்லை, அப்படி இருந்தும் இத்தனை விலை உயர்ந்த பங்கு எப்படி 7 மடங்கிற்குப் போகும்? ஒரு நிறுவனம் அவர்களுடைய பிரிவில் முதன்மையாக, மேலும் சிறப்பாகவும் செயல்பட்டால் எத்தனை விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்குபவர்கள் உண்டு.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான ரிலையன்ஸ் குரோத் பண்ட் தற்போது NAV 652 ரூபாய். இது 1995ல் 10 ரூபாய்க்கு ஆரம்பிக்கப்பட்டது, 18.5 வருடத்தில் 65 மடங்கு. இது ஒன்றும் நாம் நினைப்பதை போல காஸ்ட்லி இல்லை. நாம் எவ்வளவு சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று பார்க்க வேண்டுமே தவிர அது எவ்வளவு ரூபாய் என்று பார்க்கத் தேவையில்லை.
இத்தனை வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்ட பல அரசாங்க முடிவுகள் முடிவுக்கு வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. இவையாவும் அடுத்த ரவுண்டு சந்தை செல்வதற்கு உந்துதலான விஷயங்கள். மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 30 பங்குகளின் சராசரி. இதில் நன்றாக செயல்படாத நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு நன்றாக செயல்படக்கூடிய நிறுவனங்கள் பங்கு பெறும்.
இதில் பங்கு பெற்றுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் நன்றாகச் செயல்படுவதால் அந்த நிறுவனத்தின் மதிப்பும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு உயரும்போது பங்குச் சந்தை தானாக உயர்ந்து விடும்.
எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டிதான் அதைத் தவிர மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் என்று சொல்லக் கூடிய அடுத்த கட்டத்தில் உள்ள நிறுவனங்கள் பல மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்தக் குறியீடுகள் 2008-ல் இருந்ததைவிட இன்னும் குறைவாகவே உள்ளன.
இவை வரும் காலங்களில் சென்செக்ஸை விட மிகச் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளன. முன்பு சொன்னது போல மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் 11 முதல் 16 மடங்கு வரை (2003-2008) 5 வருடத்தில் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இதை வாய்ப்பு எனக் கருதி முதலீடு செய்தால் நமக்கு, அதே அளவோ, கொஞ்சம் கம்மியாகவோ, கூடவோ கிடைக்க நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. அதைத் தவிர்த்து அது மாதிரி இனி நடக்காது என்று நீண்ட கால முதலீடுகளைக் கூட பாதுகாப்பு கருதி வங்கி வைப்பு நிதியில் வைத்திருந்தால் நஷ்டம் யாருக்கு? யோசிக்க வேண்டிய தருணமிது.
இது நடக்காது என்று உங்களுக்கு ஒரு வேளை தோன்றினால் ஒன்றை மட்டும் யோசித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய வசதிகளும், வாய்ப்புகளும் மற்றும் நம்முடைய அன்றாட தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்குமா, இல்லையா? அதிகரிக்கும் என்று நினைத்தால் முதலீடு செய்வதற்கு இது மிகச் சிறந்த தருணம். குறையும் என்று தோன்றினால் பணத்தை வங்கியிலே பூட்டி வைத்துக் கொள்ளலாம். முடிவு உங்கள் கையில்.
சாராம்சம்: வாய்ப்புகளை நாம்தான் உணர வேண்டும். வரும் 5 ஆண்டுகளில் நம்முடைய முதலீடுகள் பங்குச் சந்தையிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ இருந்தால் நாம் கண்டிப்பாக நிறைய பணம் பண்ணும் வாய்ப்புகள் அதிகம். கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று சற்று உள்நோக்கி பார்த்தால் நமக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு மூடி கிடைக்கிறது என்பதை உணர முடியும்.
பங்கு சந்தை முதலீட்டை 10 முதல் 12 ஆண்டுகளாக (ஒவ்வொரு கட்டமாக) எடுத்துகொண்டால், குறைந்தது 3 மடங்கு முதல் 10 மடங்கு வரை பெருகி உள்ளது. கடந்த 6வருடமாக ஒன்றும் ரிடர்ன்ஸ் கிடைக்காததால் வரும் 4 முதல் 6 வருடங்களில் நல்ல ரிடர்ன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதைத் தவிர்த்து பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்டம், அதில் எல்லா பணத்தையும் இழக்கவேண்டியதுதான் என்று குற்றம் சொல்லிக்கொண்டே இந்த வாய்ப்பையும் தவற விடலாம். முன்பு செய்த தவற்றினை திருத்திக் கொண்டு நீண்ட கால அடிப்படையில்முதலீடு செய்தால் வெற்றி நிச்சயம் நமக்குத்தான். இது உண்மையிலேயே நமக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய முதலீட்டு வாய்ப்பு, புரிந்து கொள்வோம், பணம் செய்வோம் வாருங்கள்!

Monday, 9 June 2014

My 36th Article In The Tamil Hindu Dated on 9th June 2014, About Uniquness In Investment

தனித்துவமே முதலீட்டின் சிறப்பு! பா. பத்மநாபன்

 

வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முதலீட்டில் மிக அழகாகப் பொருந்தக்கூடிய ஒன்று.

எதை அறுக்க வேண்டும் என்பது அதை விதைப்பதற்கு முன்பு முடிவெடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு தனி மனிதனும் அவரவர் விதைப்பதை பொறுத்துதான், அவருடைய பலன்! ஒரு தனி மனிதனின் வெற்றி பெரும்பாலும் அவன் எடுக்கக்கூடிய ரிஸ்க்குகளும், அதைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொண்டு இருக்கிறான் என்பதைப் பொறுத்ததோ, முதலீடும் அப்படித்தான்.

கடந்த 1 மாதமாக தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் இருக்கிறது. யாரும் தங்கத்தை விற்று விடலாமா என்று எப்போதுமே கேட்பதில்லை, மாறாக விலை உயர்ந்துவிட்டால் என்ன செய்வது அதனால் முடிந்தவரை வாங்க வேண்டும் என்ற எண்ணமே உள்ளது.

அதே சமயம் கடந்த ஆகஸ்ட் 2013 ல் பங்கு சந்தை 19,000 புள்ளிகளில் தத்தளித்துக் கொண் டிருந்தபோது, கடந்த 70 மாதங்களை விட 10% தள்ளுபடியில் இருந்தும் யாருக்கும் பங்குகளை வாங்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அப்போது வாங்கியவர்கள் யாவரும் இப்போது 40% லாபத்தில் உள்ளார்கள். அதைத் தவறவிட்ட பலர் இப்போது முதலீடு செய்யலாமா இல்லை கொஞ்சம் சந்தை கீழே இறங்கினால் வாங்கிக் கொள்ளலாமா என்று வாய்ப்பைத் தவற விடுகிறார்கள்.

பலர் முதலீட்டைப் புரிந்து முதலீடு செய்வதில்லை.முதலில் நாம் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதில் உள்ள ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் பற்றி தெரிந்த பின்னரே முதலீட்டைத் தொடங்கவேண்டும்.

நம் வாழ்க்கையைப் போல முதலீடும் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. பலர் இதை புரிந்து கொள்ளமால் எப்போது உயர்ந்து கொண்டே போகவேண்டும் என்று நினைக்கிறார்கள் அது தவறான எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு முதலீடும் ஒவ்வொரு கால கட்டத்தில் சிறப்பாகச் செயல்படும், அது எப்போது செயல்பட ஆரம்பிக்கிறது என்பதை உணர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

நாம் வாங்கிய ஒரு வீடு அல்லது மனை வாங்கியதை விட இரு மடங்கோ அல்லது 3 மடங்கோ ஆனவுடன் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அது இவ்வளவு விரைவாக ஏறி விட்டதே அதை விற்று விடலாமா என்று யாரும் சிந்திப்பதில்லை. மாறாக அது மேலும் பல மடங்கு பெருகும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.

அதே சமயம் பங்குச் சந்தை கடந்த சில மாத மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருக்கிறது. அதே சமயம் அதனுடைய உச்சமான 21,000 புள்ளிகள் 6 வருடங்களுக்கு முன்னரே எட்டியது. இப்போது 20% உயர்ந் துள்ளது. உடனே பெரும்பாலோர் பணத்தை எடுத்து விடலாமா, பின்பு குறைந்தவுடன் மீண்டும் முதலீடு செய்யலாமா என்று கேட்கின்றனர்., ஒரு வேளை குறையாமல் உயர்ந்து கொண்டே இருந்தால் உங்களுக்கு மீண்டும் முதலீடு செய்வதற்கு தைரியம் வருமா?

பங்குச் சந்தையில் செய்த முதலீட்டின் போக்கை நம்மால் ஓரளவு உணர முடியும், மேலும் நமக்கு வேண்டியவற்றை விற்க முடியும், ஆனால் ரியல் எஸ்டேட்டில் அப்படி விற்க முடியாது இருந்தும் அது மேலேதான் செல்லும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய ரிஸ்க்!

பலருக்கும் உள்ள மற்றொரு கெட்ட பழக்கம் தங்கள் முதலீடு செய்தவற்றில் இது சரியில்லை அது சரியில்லை என்று குறை கூறுவதே! அதே சமயம் ஒருவர் சொன்ன ஒரு முதலீட்டு ஆலோசனை, தன்னிடம் பணம் இருந்தும் தைரியம் இல்லாமல் தவற விட்ட வாய்ப்பைப் பற்றி என்றுமே நினைப்பதில்லை.

தவறவிட்ட முதலீடு வாய்ப்பும், ஒருவருக்கு மிகப்பெரிய பெரிய இழப்பே!

இதிலிருந்து ஒன்றை என்னால் உணர முடிகிறது, ரிஸ்கை விடப் பெரியது ஒருவருடைய நம்பிக்கை. ஒருவருக்கு நம்பிக்கை தானாகவோ, அல்லது மற்றவர்களைப் பார்த்தோ, கேட்டோ வருவது, மிகவும் பலம் வாய்ந்தது. இன்று நாம் எடுக்கக் கூடிய இஞ்சினியரிங்கின் ஒரு பிரிவு 4 ஆண்டுகளுக்குப் பின்பு எவ்வாறு இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது என்பது அதில் உள்ள ரிஸ்க், ஆனால் நம்முடைய நம்பிக்கை அது நன்றாக இருக்கும் அல்லது ஏதாவது ஒரு வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்பது! அந்த நம்பிக்கை வந்ததற்கு ஒரு காரணம் பொதுவாக அந்த படிப்பு படித்தவர்கள் வாழ்க்கை நன்றாக இருந்ததே.

சாராம்சம்: இன்று நம்மை அறியாமல், நாம் பல ரிஸ்க்குகளை அன்றாடம் எடுத்த வண்ணம் இருக்கிறோம். அது தவறாகப் போனவுடன்தான் எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தோம் என்று தெரிகிறது. அது சரியாக போகும்போது மற்றவர் எடுக்கத் தவறியதை, மேலும் அதன் மேல் நமக்கு இருந்த நம்பிக்கைதான் அதற்கான காரணம் என்று அதைப் பற்றி சிந்திப்பதில்லை.

நம்முடைய தேவைகளை அறிந்து ஒரு வேளை நம்முடைய வருமானத்தில் அந்த இலக்குகளை அடைய முடியாவிட்டால், முதலீட்டின் ரிஸ்க்கை அறிந்து செயல்பட்டால் நிச்சயமாகப் பணம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் என்பது தைரிய சாலிகளுக்கே என்று ஒரு சொல் என் நினைவிற்கு வருகிறது .அதனால் ஒருவரைப் போல் ஒருவர் இல்லை நம்முடைய வாழ்வு நம் கையில். அதற்குத் தேவையான ரிஸ்க்கை எடுப்போம், முதலீட்டில் வெற்றி பெறுவோம்.

Monday, 2 June 2014

My 35th Article In The Hindu Tamil Dated on 2 June 2014, About Successful Mantra To Get Success In Investments

வெற்றிக்கு வழிகாட்டும் முதலீட்டு மந்திரங்கள் - பா. பத்மநாபன்


இன்று பலரும் கை நிறைய சம்பாதிக்கிறார்கள், இருந்தும் பணத்தைச் சேர்க்க முடியவில்லை என்று வருத்தப்படுவதுண்டு. அப்படி என்றால் அவர்கள் ஏதோ ஒன்றைக் கவனிக்கத் தவறுகிறார் கள் என்றுதானே அர்த்தம். அது என்னவென்று பார்த்தபோது எல்லோரும் செய்யக் கூடிய ஒரு விஷயம் நமக்குத் தெரிந்தது. அது என்னவென்று பார்ப்போம்.

நாம் சம்பாதிக்கும் பணத்தில் எல்லா செலவுகளும் போக மீத மிருந்தால் மட்டுமே பலர் சேமிக்கிறார்கள். பெரும்பாலும் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சேமிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

சம்பளம் செலவு = சேமிப்பு

மேலே உள்ள பார்முலாவைக் கொஞ்சம் மாற்றி அமைத்தால் நம்மால் கண்டிப்பாகச் சேமிக்க முடியும். அதாவது

சம்பளம்-சேமிப்பு=செலவு

நம்முடைய சேமிப்பையும் ஒரு செலவாகக் கருதினாலே நம்மால் சேமிக்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது. இது அவ்வளவு எளிதல்ல; ஆனால் நம்மால் முடியக் கூடியது. அதற் கான உதாரணத்தைப் பார்க்கலாம்.

இன்று ஒருவருடைய சம்பளத் தில் 50% வரை வீட்டுக் கடன் கொடுக்கப்படுகிறது. வேலைக் குச் சேர்ந்தவுடன் பெரும்பாலான பெற்றோர்கள் இதில் இணைந்து விடுகிறார்கள். மீதமுள்ள 50 சதவிகிதத்தில்தான் மற்ற அனைத்து செலவுகளையும் செய்யவேண்டும் என்ற ஒரு கட்டு பாட்டிற்குள் திணிக்கப்படுவதால், ஆரம்பத்தில் கடினமாக இருந்த ஒரு பழக்கம் நாளடைவில் பழகி விடுகிறது.

மேலும் இது மிகப் பெரிய தொகை, 20% சேமிப்பு என்பது ஒரு கடினமான பழக்கம் இல்லை, அதனுடைய பலனை உணர்ந்தால். மேலும் இந்த சேமிப்பை ஒரு வேளை குறிப்பிட்ட காலத்திற்கு உங்களால் தொடர முடியாவிட்டால், நிறுத்தி மீண்டும் தொடங்கலாம். ஆனால் வீட்டுக்கடனில் அது முடியாது.

நிறைய பேர் எந்த ஒன்றிலும் கமிட் செய்துகொள்ள விரும்பு வதில்லை. நாம் ஒன்றை கமிட் செய்யும்போது நாம் கூடுதலாக அதற்கு உழைக்கிறோம் என்பது தான் உண்மை. அதனால் நம் கண்ணுக்கு தெரிந்தவரை ஒரு செலவு இல்லையென்றால் அந்தப் பணத்தை முதலீடு செய்வது நல்லது. அதைவிடுத்து கமிட் செய் தால் என்னால் தொடர முடியா விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தேவையில்லை.

நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பு பவர் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப் பவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தால் கற்றுக் கொள்ள முடியாது. கொஞ்ச நேரம் பார்த்த பின்பு, குளத்தில் குதித்தால் தான் கற்றுக் கொள்ளமுடியும்.

2. முதலீட்டை சீக்கிரம் தொடங்குதல்

ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவு டன் முதலீட்டைத் தொடங்க வேண்டும். அது 1,000 ரூபாயாக இருந்தால்கூட பரவாயில்லை. பின்பு வருமானம் அதிகரிப்பதற் கேற்ப முதலீட்டை உயர்த்திக் கொள்ளலாம். ஐந்தில் வளையா தது ஐம்பதில் வளையுமா என்ற பழமொழிக்கேற்ப நாம் சிறு வயதில் தொடங்கவில்லை யென்றால் பின்பு ஆரம்பிப்பது கடினம். உதாரணமாக நம்முடைய பங்குச் சந்தை 1979- 80-ம் ஆண்டு களில் 100 புள்ளிகளுக்கு ஆரம்பிக் கப்பட்டது.

இன்று 24,000 புள்ளிகள் அதாவது 240 மடங்கு, கடந்த 35 வருடங்களில். இது கிட்டத்தட்ட 17% கூட்டு வட்டி. நீண்ட கால அடிப்படையில் 15% கூட்டு வட்டி எதிர்பார்ப்பது மிகவும் குறைந்த எதிர்பார்ப்பே.
பலர் கடந்த ஆண்டுகளைப் போல வரும் காலம் இருக்காது என்று சொல்வார்கள். நான் ஒன்றே ஒன்றை மட்டும் சிந்திக்கச் சொல்கிறேன். நம்முடைய தேவைகள் கடந்த ஆண்டுகளைப் போல இருக்குமா, குறையுமா அல்லது அதிகரிக்குமா என்றால் எல்லோருடைய ஒருமித்த பதில் நம்முடைய தேவைகள் குறைவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. அதனால் வரும் காலங்களிலும் 15% கிடைப்பதற் கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

3. கூட்டு வட்டியின் அசுர பலம்

கூட்டு வட்டியை உலகின் எட்டா வது அதிசயம் என்று கூறுகிறார் கள். ஆரம்பத்தில் அது மிகச் சாதாரணமாகத் தோன்றும், 10 வருடம் தாண்டிய பிறகு அதனுடைய பலம் எல்லோராலும் அறியப்படும். உதாரணமாக ஒருவருடைய முதலீடு 10 வருடங்களில் 15% கூட்டு வட்டியில் 4 மடங்கு ஆகிவிடும். அதே பணம் 15 வருடங்களில் 8 மடங்கும், 20 வருடத்தில் 16 மடங்கும் ஆகி விடுவதற்கான வாய்புகள் மிக அதிகம். 10 வருட இடைவெளி 4 மடங்கு என்பது 16 மடங்கு ஆகிவிட்டது. இன்று நிறைய பணம் செய்தவர்கள் பெரும்பாலும் இந்த பார்முலாவைப் பற்றி நன்கு அறிந்தவர்களே.

4. முதலீட்டில் தனி மனித ஒழுக்கம் (SELF DISCIPLINE)

முதலீட்டில் வெற்றி பெறுவதற்குத் தனி மனித ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது. எந்த ஒரு ஒழுக்கமும் கடைபிடிப்பது என்பது கடினம்; ஆனால் இங்கு நான் முன்பே சொன்ன மாதிரி சேமிப்பது போக மீதமுள்ளதை செலவழித்தால் இந்த ஒழுக்கத்தை எளிதாகக் கடைபிடிக்க முடியும். எந்த ஒன்றை நாம் செய்தாலும் அதில் என்ன பயன் என்று தெரிந்த பின்பே அதைச் செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுப் போம். ஒருவர் கூட்டு வட்டியின் பலனை உணர்ந்தால் இந்த முதலீடு ஒழுக்கம் தானாகவே வந்துவிடும்.

5. கடன் வாங்கி முதலீடு!

நாம் வாங்கக்கூடிய கடன் பாது காப்பான வட்டி விகிதத்தைவிட எப்போதுமே அதிகமாகத்தான் இருக்கும். எந்த முதலீடும் குறுகிய கால அடிப்படையில் பலன் தருவது கடினம். அப்படி இருக்கும்போது வட்டியையும் கட்டிக்கொண்டு காத்திருப்பது என்பது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது. சேமிப்பு போக செலவு என்று ஆரம்பத்திலேயே கடைபிடிப்பவர் கள் இந்தக் கடனில் சிக்கிக் கொள் வதில்லை. மேலும் கடன் இருந் தால் நாம் நிம்மதியாக உறங்க முடியாது. அது ஒருவருடைய உடல் மற்றும் மனதைப்பெரிய அளவு பாதிக்கும்.

சாராம்சம்: இந்தியர்களுக்கு உள்ள ஒரு மிகப்பெரிய சாதக அம்சம் என்னவெனில் பெரிதாகக் கடன் வாங்கும் பழக்கம் இல்லாதது. மேலும் பிற நாடுகளில் உள்ளதுபோல ஒருவுடைய தகுதிக்கு மீறி இந்தியாவில் பெரும்பாலும் கடன் தருவதுமில்லை. மற்றொரு உதாரணம் நம்முடைய வைப்பு நிதியில் உள்ள பணத்தைப் பார்த்தாலே நமக்கு சேமிக்கும் குணம் இருப்பது தெரிகிறது.

நமக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் அவ்வாறு சேமிக்கும் பணத்தை எந்த அளவுக்கு சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு ஒதுக்குவது என்பதே. நம்முடைய இலக்குகளை உணர்ந்தால் அதை எளிதாகப் பிரித்துக் கொள்ளலாம். பிறகு மேலே சொன்ன சிலவற்றைக் கடைபிடித்தாலே நாம் நிறைய பணம் செய்து நம் வாழ்வைச் சிறப்பாக்கிக் கொள்ள முடியும். ஏனெனில் மேலே சொன்ன ஐந்தில் குறைந்தது இரண்டு நம்முடைய ரத்தத்திலேயே உள்ளது. இவையாவற்றிற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினாலே போதும். இது நம்முடைய வாழ்க்கை, நம் கையில்தான் உள்ளது.